
ஸ்ரீபெரும்புதூர், ஆக 19 – ஏஜி&பி பிரதம் நிறுவனம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் எல்பிஜி கியாசுக்கு மாற்றாக இயற்கை எரிவாயுவை குழாய் மூலம் இந்தியா முழுவதும் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் வழங்கி வருகிறது.
ஸ்ரீபெரும்புதூர் பண்ருட்டி கிராமத்தில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு அப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 13-ந்தேதி கிராம பஞ்சாயத்து மூலம் கால்வாய் அமைக்கும் பணிக்காக ஜேசிபி எந்திரம் கொண்டு பள்ளம் தோண்டியபோது அங்கு பதிக்கப்பட்டு இருந்த ஏஜி&பி பிரதம் நிறுவனத்திற்கு சொந்தமான 32 மி.மீ. விட்டம் கொண்ட இயற்கை எரிவாயு குழாயில் சேதம் ஏற்பட்டது. இதன் காரணமாக எரிவாயு கசிவு ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்து வந்த இந்நிறுவனத்தின் ஊழியர்கள் அதை அரை மணி நேரத்தில் சரி செய்து அப்பகுதிக்கான எரிவாயு வினியோகத்தை சீர்செய்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடப்பு சட்டத்தின்படி ஐபிசி பிரிவு 285 மற்றும் 336-ன் கீழ், அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற பணிகளால் ஏற்படும் சேதங்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 25 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
அரசு சட்டத்தின்படி, மூன்றாம் தரப்பினர் பள்ளம் தோண்டும் பணிகளைத் தொடங்க திட்டமிட்டால், அவர்கள் நகராட்சி அல்லது நகர எரிவாயு வினியோக நிறுவனத்திற்கு ‘தோண்டுவதற்கு முன் தொடர்பு கொள்ளுங்கள்’ என்னும் எண்ணிலும் ஏஜி&பி பிரதம் நிறுவனத்தின் கட்டணமில்லா எண். +91 8056847333/1800-2022-999 மூலம் தெரிவிக்க வேண்டும். சட்டத்தை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், இதுபோன்ற அலட்சியங்களைத் தவிர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், மூன்றாம் தரப்பினரால் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் மீண்டும் வலியுறுத்துகிறது என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.