
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்திற்கு சமூக ஆர்வலரும், ஈகை இனிது அறக்கட்டளையின் நிறுவனருமான ப.தனசேகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சிவகாசி அருகே நெடுங்குளத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 3 பெண் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் கொத்து, கொத்தாக தொடர்கதையாகி வருகிறது.
இதுபோல் வெடி விபத்துகள் நடக்கும் போதெல்லாம் பெயரளவிற்கு அரசு தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வரும். அதில் மரண செய்தி வருத்தமளிப்பதாகவும், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு சொற்பத்தொகையை நிவாரணமாகவும் தமிழக முதல்வர் அறிவித்திருப்பார். ஆனால் தொடரும் இந்த படுகொலைகளை நிறுத்த எந்தவித தீர்வும் அதில் இருக்காது.
பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்படாமல் இருக்க போலீஸ், தீயணைப்பு, தொழிலாளர் நலத்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த குழு பட்டாசு ஆலைகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஒவ்வொரு தொழிற்சாலையும் எவ்வளவு பட்டாசுகள் தயாரிக்க வேண்டும் என்ற வரம்புகளாவது அரசிடம் உள்ளதா? என்ற கேள்வி நமக்கு எழுகிறது. அதீதமான உற்பத்தியும் அதற்காக வேகமாக வேலை செய்வதும் முதலாளிகளுக்கு தேவைப்படுகிறது. அவர்களுக்கு லாப வெறி தான் முக்கியமே தவிர தொழிலாளர்களின் வாழ்வு அல்ல. அரசும் முதலாளிகள் பக்கம் நிற்பதால் விபத்துகள் தொடர்கதை ஆகிவிட்டன.
விபத்துகளை தடுக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் எவ்வளவு உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்ற வரம்பு, தொழிலாளர்களின் வேலைகளை உடனிருந்து கவனித்து வழிகாட்டக்கூடிய பாதுகாப்பு குழுக்கள், தொழிலாளர்களின் உரிமைகளை பேசக்கூடிய சங்கங்கள் அமைப்பது போன்றவற்றை இந்த அரசு செய்ய வேண்டும். இதை மீறும் தொழிற்சாலைகளை அரசே கட்டுப்பாட்டில் எடுக்கவேண்டும்.
மனிதத் தவறுதான் காரணம் என்று பணிபுரிந்த தொழிலாளர்களின் மீது சுலபமாக பழியை போட்டுவிட்டு நகர்ந்து விடுகிறது அரசு. இதை நிறுத்திவிட்டு இனியாவது ஏழை தொழிலாளர்கள் மீதான அநீதியை தடுத்து நிறுத்த அரசு முயற்சிக்க வேண்டுமென என்ற கோரிக்கையை முன்வைக்கிறேன்” எனக்குறிப்பிட்டுள்ளார்.